Top News
| QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை | | எரிபொருள் QR முறை சிக்கல்களுக்கு தீர்வு |
Mar 18, 2026

முன்பள்ளி ஆசிரியர்களின் சிறந்த சேவையின் அங்கீகாரமாக சம்பள உயர்வு அமைய வேண்டும்!

Posted on July 10, 2025 by Admin | 232 Views

நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் இயங்கி வரும் முன்பள்ளிகள் ஒரே கட்டமைப்பில் செயல்படுவதற்காக தேசிய திட்டமொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் உயர்த்தப்பட வேண்டும் என்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (09.07.2025) பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலான கூட்டத்தில் உரையாற்றிய அவர், வெளிநாடுகளில் முன்பள்ளித்துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்று, இலங்கையிலும் ஒரு தேசிய கட்டமைப்பை உருவாக்கி 09 மாகாணங்களிலுள்ள அனைத்து முன்பள்ளிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில்:

  • கிழக்கு மாகாணத்தில் 1828 முன்பள்ளிகள், 3884 ஆசிரியர்கள், மற்றும் 53,085 மாணவர்கள் உள்ளனர்.
  • 2500 ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5000 மட்டுமே வழங்கப்படுகின்றது.
  • 1384 ஆசிரியர்களுக்கு பிரதேச சபை, செயலகம், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மூலம் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
  • அடுத்த மாதத்திலிருந்து இது ரூ.6000 ஆக அதிகரிக்கப்பட உள்ளதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • எனினும், இத்துறை முழுமையாக கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு, ஒரு ஒருங்கிணைந்த தேசிய பாடத்திட்டம் மற்றும் செயற்பாட்டு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், கடந்த அரசாங்கங்களில் போலவே தற்போது முன்பள்ளித் துறையில் அரசியல் நியமனங்கள் நடைபெறுவதாகவும், எதிர்காலத்தில் இதனை தவிர்க்க வேண்டும் எனக் கூறினார். உயர் பதவிகளில் கல்வித்துறையில் அனுபவம் கொண்ட நபர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், தேசிய அளவிலான ஒரே மாதிரியான திட்டத்தை செயல்படுத்த மாகாண சபைகளுடன் இணைந்து அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதற்குரிய பதிலளித்த அமைச்சராவார் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ்,

நாட்டில் தேசிய ரீதியில் முன்பள்ளித்துறைக்கான திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகள், கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சுகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் தேவைப்படும் என்று அவர் தெரிவித்தார்