Top News
| உலக நம்பிக்கை பெற்ற தலைவர்களில் முதல் இடம் யாருக்கு? | | அக்கரைப்பற்று பொதுச் சந்தை சுத்தம் செய்யும் பணி ஆரம்பம் | | காசாவுக்கான 950 நிவாரண லாரிகள் இஸ்ரேல் அனுமதிக்காக காத்திருப்பு |
Jul 27, 2025

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கன்னி அமர்வில் பாலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுத்த பிரதித் தவிசாளர் பாறூக் நஜீத்

Posted on July 21, 2025 by Admin | 91 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2025ஆம் ஆண்டுக்கான முதலாவது (கன்னி) அமர்வு இன்று (21) சபா மண்டபத்தில், கௌரவ தவிசாளர் A.S.M. உவைஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமர்வில் பிரதித் தவிசாளர் M. பாறூக் நஜீத் அவர்களால் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அவசர பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

பிரேரணையின் முக்கிய அம்சங்கள்:

பிரேரணையில், 1948ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளால் பாலஸ்தீன மக்கள் அவர்களின் நிலம், அடையாளம் மற்றும் சுயாட்சி ஆகியவற்றை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அகதிகளாக மாற்றப்பட்டு, கட்டாய இடம்பெயர்வுகளால் அடிப்படை மனித உரிமைகள் பீடிக்கப்பட்டுள்ளதையும், அண்மைக்காலங்களில் காசா மற்றும் வெஸ்ட் பாங்க் பகுதிகளில் ஏற்பட்ட தாக்குதல்களால் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

பிரதேச சபை, மனிதாபிமான அடிப்படையில் நான்கு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது:

  1. பாலஸ்தீன மக்களுக்கு முழுமையான ஆதரவு – அவர்களின் சுயாட்சி, மனித உரிமைகள், நில உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
  2. சர்வதேச சமுதாயம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் – இஸ்ரேலால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக.
  3. மத்திய கிழக்கில் அமைதி பாதிக்கப்படும் அபாயம் – ஈரானை நோக்கி மேற்கொண்ட தாக்குதல்களை குற்றம் சாட்டி, எதிர்கால நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
  4. இலங்கை அரசும் மனிதாபிமான அடிப்படையில் செயற்பட வேண்டும் – சரியான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தல்.

“இந்த பிரேரணை நமது சபையின் மனித உரிமை மற்றும் சமாதான தார்மீகக் குரலாகும்,” என பிரதித் தவிசாளர் கூறினார்.

இந்த பிரேரணை S.I.M. ரியாஸ் அவர்களால் பிரேரிக்கபட்டு, A.L. பாயிஸ் அவரால் ஆமோதிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு பின், சட்டவிரோத சபாத் குடியேற்றங்களை எதிர்த்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் சபை வளாகத்தில் நடைபெற்றது.