நாட்டில் எட்டுக்கும் மேற்பட்ட வகையான சரும வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்திற்குப் புறம்பாக கிடைப்பதாக சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த பொருட்களைப் பயன்படுத்தும் பல இளைஞர்கள் புற்றுநோய்க்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கிரீம்கள் மற்றும் வாசனை திரவியங்களில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்கள் உள்ளன. உலக சுகாதார அமைப்பின் தரச்சான்றின்படி, பாதரசத்தின் அதிகபட்ச அளவு ஒரு மில்லியனில் ஒரு பங்கு இருக்க வேண்டும். ஆனால், சந்தையில் கிடைக்கும் சில அழகுசாதனப் பொருட்களில் பாதரசம் ஒரு மில்லியனில் 10,000 அல்லது 20,000 பங்குகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அழகுசாதனத் துறையில் தரமற்ற பொருட்களின் பெருக்கம், நிபுணர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. இதில், தவறான தயாரிப்பு முறைகள், நியமனக் கண்காணிப்பின் பற்றாக்குறை என்பவை முக்கியக் காரணங்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ கூறியதாவது,
“2015ஆம் ஆண்டு மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் திருத்தப்பட்ட பிறகு, வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் நீக்கப்பட்டதால், தற்போது பல தனியார் நபர்கள் ,ஆயுர்வேத மருத்துவர்கள், அழகுக்கலை நிபுணர்கள், மற்றும் தகுதியற்ற தயாரிப்பாளர்கள் வெண்மையாக்கும் கிரீம்களை தங்கள் வீட்டில் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.”
இந்தப் பொருட்கள் கடைகளிலும், ஆன்லைன் பிளாட்ஃபாரங்களிலும் திறந்தவெளியில் விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், அவை உடல்நலத்திற்கே நேரான ஆபத்துகளை ஏற்படுத்தும் என அவர் வலியுறுத்தினார்.