தரமற்ற கரிம உரம் இறக்குமதி தொடர்பாக இடம்பெற்ற வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு பிணை வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (மே 26) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் அவருடைய சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்ததையடுத்து, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த தீர்ப்பை வழங்கினார்.
இந்த தீர்ப்பின் படி, சந்தேகநபரான மஹிந்தானந்த அலுத்கமகேவை ரூ.50,000 ரொக்க பிணையில் மற்றும் தலா ரூ.1 மில்லியன் பெறுமதியான ஐந்து சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அத்துடன் பிணையளிக்கும் இருவரும் சந்தேகநபரின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் எனவும், அவருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது. கடவுச்சீட்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சாட்சிகளிடம் அழுத்தம் மேற்கொள்ள வேண்டாம் என்றும், விசாரணைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதும் நீதவான் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது