மேல் மாகாணத்தில் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் செல்லுபடியான பயணச்சீட்டுகளை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என மாகாண போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பயணச்சீட்டை வழங்க மறுக்கும் நடத்துநர்களுக்கு தற்போது 750 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனுடன், நாளை (01) முதல் பயணச்சீட்டில்லாத பயணிகளுக்கும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, கட்டணத்தை விட இரண்டு மடங்கு அபராதமும் விதிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் இவ்வபராதத் தொகை திருத்தப்பட வாய்ப்பும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2002ம் ஆண்டின் விதிகளின் கீழ் பயணிகள் முச்சக்கர வண்டிகளின் பதிவு மற்றும் உரிமம் பெறும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. பயணிகள் போக்குவரத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே இவ்விதிகளின் முக்கிய நோக்கமாகும்