இந்த ஆண்டின் இதுவரை கடந்த காலப்பகுதியில் இலங்கையில் 23,404 பேர் டெங்கு வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சல் நீடித்து குறையாமல் இருந்தால், உடனடியாக மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என வைத்திய நிபுணர் டாக்டர் பிரஷிலா சமரவீர வலியுறுத்தினார்.
அரசு நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டிட நிர்மாணப் பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் மதஸ்தலங்களில் டெங்கு நுளம்புகள் அதிக அளவில் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், புறக்கோட்டையில் அமைந்துள்ள மிதக்கும் சந்தை, டெங்கு நுளம்புகள் வேகமாக பரவக்கூடிய பகுதியாக மாறிவருவதாக கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரித்தார்.
தொடர்ந்து பெய்துவரும் மழையால் டெங்கு மற்றும் சிகுன்குனியா நோய்கள் வேகமாக பரவி வருவதாகவும், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் நுளம்புகளின் பெருக்கத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.