அட்டாளைச்சேனை சம்புக்களப்பு பகுதியை கடந்து ஓடும் தில்லையாற்றின் மோசமான நிலைமையால் நீண்ட காலமாக விவசாயிகள் எதிர்கொண்ட சிரமத்திற்கு தற்போது தீர்வுக்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்பாடுகள் தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினர் A. ஆதம்பாவா அவர்களின் நேரடி ஈடுபாட்டின் வழியாக உருவாக்கப்பட்டுள்ளன.
விவசாய அமைப்பின் முறையீடு மற்றும் திடமான நடவடிக்கை
தில்லையாற்று பகுதியில் நீர் ஒழுங்கீனம், நிலக்கீழ் குளறுபடி, மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை வழளாவாய் மேற்கண்ட விவசாய அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் A.C.M. சமீர் மற்றும் செயலாளர் A.L. நூஹு முஹம்மத் T.R. ஆகியோர் தலைமையிலான குழுவினர் கடந்த மாதம் தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழுவுடனும், பாராளுமன்ற உறுப்பினர் A. ஆதம்பாவாவுடனும் முக்கிய சந்திப்பை மேற்கொண்டனர்.
இந்த சந்திப்பில் தில்லையாற்றை செப்பனிடுவதற்கான முக்கிய வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட A.ஆதம்பாவா, நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பணிகளை விரைவாக தொடங்குமாறு உத்தரவிட்டார்.
செப்பனிடும் பணி ஆரம்பம் – 90% பூர்த்தி
இதற்கமைய, நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் S. சுகீதரன் தலைமையில், NPP மத்திய குழுவினரும், விவசாய அமைப்பினரும் இணைந்து தில்லையாற்று பகுதியில் களவிழி செய்து பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தனர். தற்போது இந்த செப்பனிடும் பணிகள் 90 சதவீதம் பூர்த்தியாகியுள்ளன.
நேரில் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர்
பணி முன்னேற்றத்தைக் கண்ணோட்டம் செய்யும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர் A. ஆதம்பாவா அவர்கள் இன்று தில்லையாற்று பகுதியை நேரில் பார்வையிட்டார். அவருடன் NPP அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவர் தோழர் ஏ.எம். அர்பான், அமைப்பாளர் எஸ்.எம். றியாஸ், செயலாளர் வஹாப் ரிஷாட் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அடுத்த கட்ட கோரிக்கைகள் – சுற்றுலாவுக்கான திட்டமிடல்
இச்சந்திப்பின் போது, தில்லையாற்றின் இருபுறத்திலும் சீரமைக்கப்பட்ட பாதைகள் அமைக்க, மற்றும் பகுதியை சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய பராமரிப்புடன் அழகுபடுத்தும் திட்டங்களை மேற்கொள்ள வேண்டியும் மத்திய குழுவினர் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதற்குப் பதிலளித்த A. ஆதம்பாவா அவர்கள், “இன்ஷா அல்லாஹ், இந்த திட்டமும் விரைவில் நடைமுறைபடுத்தப்படும்,” என உறுதியளித்தார்.