Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

இனவாதம் மூலம் அதிகாரம் பிடிக்க முயற்சி – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க-

Posted on May 19, 2025 by Admin | 148 Views

தேசிய இராணுவ வெற்றி தின விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,“வடக்கும் தெற்கும் இனவாதத்தை ஆயுதமாக மாற்றி சிலர் அதிகாரத்தைக் கைப்பற்ற முயலுகிறார்கள்” என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.

இன்று (19) பிற்பகல் 4 மணிக்கு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள இராணுவ நினைவுச் சின்னத்தில் 16வது இராணுவ வெற்றி தினம் அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டது. இந் நிகழ்வில் முப்படைத் தளபதிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி,

“இந்நேரத்தில் இனவாதத்தைத் தூண்டி, அதனை அதிகாரத்திற்கான சாதனமாக மாற்ற நினைக்கும் நடவடிக்கைகள் பாரிய ஆபத்துகளை ஏற்படுத்தும். மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய தருணம் இது,” என்றார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“நாடு, இனவாதம் மற்றும் மதவாதம் இன்றி அனைவரையும் ஒத்துழைத்துவைத்து நாடு வளர்ச்சி பெற வேண்டும். மீண்டும் யுத்தம் ஏற்படக் கூடாது. யுத்தத்தில் போரிட்ட படையினர் சமாதானத்தை நோக்கிக் தான் போரிட்டனர். அவர்களின் தியாகத்தைக் நாம் மறக்கக்கூடாது.”

வடக்கு, கிழக்கு என பிரித்துப் பார்க்க முடியாமல், கடந்த யுத்தத்தால் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்விழாவில் உரையாற்றிய அவர், “எந்த ஒரு பெற்றோருக்கும் தமது பிள்ளைகள் பெறுமதியானவர்களே. யாருடைய இழப்பையும் அலட்சியமாகக் கணிக்க முடியாது,” என தெரிவித்தார்.

“யுத்தம் ஒரு நாட்டுக்குத் துன்பம் மட்டுமே தரக்கூடியது என்பதை நன்கறியும் மக்கள், இன, மத பேதங்களைத் தாண்டி சகோதரத்துவம், கருணை மற்றும் பாசத்தின் அடிப்படையில் அமைதியான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்,” என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இவ்வாறு நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், எதிர்கால அமைதிக்கும் வலியுறுத்தல் செய்யப்பட்டபோது, நிகழ்வில் பங்கேற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.