Top News
| இன்று பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு பொதுமக்கள் அவதானம் தேவை! | | இறக்காமத்திற்கு தனி நீதிமன்றம் தேவை: பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை (எம்.பி) வலியுறுத்தல் | | தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இளைஞர் அமைப்பாளராக இஷ்னாப் அன்வர் நியமனம் |
May 24, 2025

ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயதுத் தந்தைக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

Posted on May 23, 2025 by Admin | 61 Views

ஏழு வயது சிறுமியை கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயதுடைய ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

நீண்டகால விசாரணையின் பின்னர், நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த கடுமையான தீர்ப்பை வழங்கினார். குற்றவாளிக்கு ரூ. 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை செலுத்தத் தவறினால், மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.30 இலட்சமும், அவளது தாய்க்கு ரூ.10 இலட்சமும் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்விழப்பீடு செலுத்தப்படாவிட்டால், குற்றவாளிக்கு மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

வழக்கு பின்னணி:

2015 ஜூலை 3ஆம் திகதி, குற்றவாளி (அப்போது 53 வயது), சிறுமியின் பெற்றோர் அறிந்த நபராக இருந்தார், பாடசாலையில் இருந்து சிறுமியை அழைத்து வரும்போது, “வீட்டில் சிறு குழந்தைகள் இருக்கின்றன, விளையாடலாம்” என கூறி சிறுமியை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பின், மீண்டும் வீட்டிற்கு கொண்டு சென்றார்.

சிறுமியின் நடமாட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்த தாயார் விசாரிக்கையில், சம்பவம் வெளிப்பட்டு தெமட்டகொட மற்றும் கிரேண்ட்பாஸ் பொலிஸாரிடம் புகார் பதிவு செய்யப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபை வீடியோ சாட்சி மூலம் சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்தது.

தண்டனையை முன்னிட்டு நீதிபதி கருத்து:

நீதிபதி தீர்ப்பில், குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்தவர் என்றும், தாய் கர்ப்பிணி நிலையில் வைத்தியசாலையில் இருந்த காரணத்தால், அவரிடம் சிறுமியை அழைத்து வருமாறு பெற்றோர் நம்பிக்கையுடன் கேட்டிருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களும், வீடியோ சாட்சியங்களும் வழக்கில் முக்கிய பங்காற்றின. அரச சட்டத்தரணி, குற்றவாளி பெண் பிள்ளைகளின் தந்தை என்ற நிலையிலும் இத்தகைய செயலில் ஈடுபட்டதை கடுமையாக கண்டித்து, அதிகபட்ச தண்டனை கோரினார். குற்றவாளியின் சட்டத்தரணி, அவரின் வயதும் உடல் நலனும் கருதி சலுகை கோரினார்.

நீதிபதி தீர்மானம்:

இவையனைத்தையும் பரிசீலித்த நீதிபதி, “பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியவர், அவர்களது மதிப்பை புரிந்திருக்க வேண்டியவர் இவ்வாறு செயல்படுவது முற்றிலும் அழுக்கு” எனக் கண்டித்தார். குற்றவாளி மீது மென்மையான அணுகுமுறை ஏற்புடையதல்ல என்றும், சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்களை ஒழிக்க, கடுமையான தண்டனை அவசியம் என்றும் தெரிவித்தார்.