Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

வெளிநாட்டில் உள்ளவர்கள் தம் உறவினர்களுக்காக அனுப்பிய பொருட்களை ஏற்றி வந்த லொறி ஆற்றில் கவிழ்ந்தது

Posted on June 7, 2025 by Admin | 367 Views

வெளிநாட்டில் வேலை செய்யும் நபர்கள் தங்களது குடும்பத்தினருக்காக பெருநாளை முன்னிட்டு அனுப்பிய பொருட்களை ஏற்றி வந்த லொறி ஒன்று இன்று அதிகாலை சுமார் 4.00 மணியளவில் கந்தளாய் – சூரியபுற பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுற எல்லைப் பகுதியில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

கொழும்பு லக்ஷரி கார்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த லொறி, சாரதிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தூக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாக ஆரம்ப விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன. விபத்து நேரத்தின் போது லொறியில் சாரதியர் மட்டுமே பயணித்துள்ளார். அவருக்கு எளிதான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், உயிருக்கு ஆபத்து இல்லை எனத் தெரியவந்துள்ளது.

கொழும்பிலிருந்து நேற்று மாலை கிளம்பிய இந்த லொறி, கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளில் பொருட்கள் இறக்கிவிட்டு, சேருநுவர வழியாக கந்தளாய் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றது.

பல லட்ச ரூபா பெறுமதியான வெளிநாட்டு பொருட்கள் ஆற்றில் மூழ்கி கடுமையான சேதமடைந்துள்ளதாகவும், பெருநாளுக்காக எதிர்பார்த்த குடும்பங்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சூரியபுற பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.