(அபூ உமர்)
பொத்துவில் ஹெடஓயா நாவலாறு மற்றும் பிரம்கண்டம் ஆற்றின் குறுக்கே பாலங்களை கட்டுவதற்கான பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கேட்டுக்கொண்டுள்ளார்.
நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்றும் விமானத்துறை அமைச்சின் விவாதத்தில் உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இப்பாலங்களுக்காக விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விலைமனுக்கள் கோரப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றத்தால் இந்த வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இப்பகுதியில் விவசாயிகள் தங்களது நிலத்தொடர்புகளை ஏற்படுத்த ஆற்றைக் கடக்கும் வகையில் கம்பிகள் கட்டி, உயிரை பணயம் வைத்து இயங்கும் அபாயகரமான சூழ்நிலை நிலவுகிறது. உரம், விதைநெல் போன்ற முக்கிய தேவைகள் இந்த ஆறுகளைக் கடக்கவேண்டும் என்பதால் பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.
“இது ஒரு மக்கள் பாதுகாப்பு மற்றும் விவசாய வளர்ச்சி சார்ந்த அத்தியாவசியம். எனவே, இந்த பாலங்களுக்கான திட்டங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்,” என உதுமாலெப்பை வலியுறுத்தினார்.