அனுராதபுரம் சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை தவறாக பயன்படுத்தி கைதிகளை விடுவித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிறைச்சாலை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) விசேட விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்தது.
பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சில சிறைக்கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக பல்வேறு சிறைச்சாலை அதிகாரிகள் மீது சந்தேகம் எழுந்த நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை விரிவாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் முதன்மையாக சந்தேகிக்கப்படும் அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் தற்போது CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தொடர்புடைய பிற உத்தியோகத்தர்களை பற்றியும் விசாரணைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.