முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸக்கு, 2022 மே 9 ஆம் தேதி ஏற்பட்ட கலவரத்தில் அவரது சொத்துகள் சேதமடைந்ததாகக் கூறி, ரூ.15.2 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என அரசாங்க ஆதரவு பெற்ற சிலுமின செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது.
சமல் ராஜபக்ஸ, திஸ்ஸமஹாராம – மாகம பகுதியில் உள்ள சொத்து சேதமடைந்ததாக கூறி இழப்பீடு கோரியிருந்தார். ஆனால், விசாரணைகளில் அந்த சொத்து அவரது பெயரில் இல்லை என்பதும், அங்கு வீடு போன்ற வசிப்பிட அமைப்பு ஏதும் இல்லையென்பதும் வெளியாகியுள்ளது. அந்த இடத்தில் வெறுமனே ஒரு நெல் களஞ்சியம் மட்டுமே இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
மீண்டும், சமல் ராஜபக்ஸ குறித்த நிலம் தனது கட்டுப்பாட்டில் உள்ளது என சத்தியப்பிரமாணம் செய்து அளித்திருந்தாலும், விசாரணையில் அந்த நிலம் மற்றொரு நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
2023 ஜூலை மாதம் வெளியான மதிப்பீட்டு அறிக்கையில், அந்த இடத்தில் ரூ. 14.8 மில்லியன் மதிப்புள்ள வீடு உள்ளது என்றும், களஞ்சியத்துக்கு ரூ. 2.2 லட்சம் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது நிர்வாக அமைச்சு, இந்த இழப்பீட்டை வழங்கும் பொறுப்பில் தங்கள் அமைச்சு இல்லை எனத் தெளிவுபடுத்தியிருந்தாலும், முழு இழப்பீட்டு தொகையும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு (CIABOC), சமல் ராஜபக்ஸவிடம் விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாகவும், இழப்பீட்டை அனுமதித்த அரசு அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.