(அபூ உமர்)
பாராளுமன்ற விவாதங்களின்போது உறுப்பினர்கள் தங்களின் வார்த்தைகளில் மரியாதை மற்றும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்றும் விமான சேவை அமைச்சின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “உயரிய சபையான பாராளுமன்றத்தில், மக்களின் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி தேவைகள் பற்றி விவாதிக்கவேண்டும். ஆனால் சிலர் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள், இது மக்களுக்கும், மாணவர்களுக்கும் தவறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.
பாராளுமன்ற உரைகளை மாணவர்களும், பொதுமக்களும் கவனமாகக் கேட்டு வருகின்றனர் என்பதையும், சில உறுப்பினர்களின் மொழிப் பிரயோகம் கேட்க வெட்கமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் நலனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும், இழிவான வார்த்தைகளுக்கு இடமில்லாமலும் உறுப்பினர்களின் கெளரவங்கள் பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.