பொதுமக்களின் நெரிசலையும், பதற்றத்தையும் தவிர்க்கும் நோக்கில், பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவதை உடனடியாக நிறுத்தியதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில், பீப்பாய்கள் மற்றும் கேன்களை கொண்டு எரிபொருள் பெறுவதற்காக நுகர்வோர் கூட்டம் பெருகியதால் தேவையற்ற வரிசைகளும் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்தத் தடை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த முடிவை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும், விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூட்டுத்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் தற்போது போதுமான அளவில் எரிபொருள் இருப்பில் உள்ளதாகவும், மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு மற்றும் உண்மை நிலையை புரிந்து கொள்ளுமாறு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.