அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இரவு நேர மின்னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டி, கடந்த ஜூலை 2ஆம் தேதி ஆரம்பமாகி, ஜூலை 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இத்தொடரில், 40 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டிக்குள் ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியர்ஸ் மற்றும் நிந்தவூர் அட்வென்ஞர் அணிகள் முன்னேறின.
நாணய சுழற்சியில் வென்ற ஈஸ்டர்ன் வோரியர்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடி, 25 பந்துகளில் ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ஓட்டங்கள் பெற்றனர். பதிலுக்கு விளையாடிய நிந்தவூர் அணியினர், அதே எண்ணிக்கையான 25 பந்துகளில் 40 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர்.
இதன் மூலம், ஈஸ்டர்ன் வோரியர்ஸ் அணி சாம்பியனாக மாற, நிந்தவூர் அட்வென்ஞர் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
வெற்றிபெற்ற அணிக்கு ரூ.50,000, இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு ரூ.25,000 ஆகிய பணப்பரிசுகளும், வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், நெஸ்ட் சர்வதேச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்.எம். சப்னாஸ், முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். இரண்டாம் இடத்தினருக்கான பரிசுகளை பொனிட்டா, ஸ்மார்ட் சூ நிறுவனங்கள் வழங்கின.
மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத் தலைவர் எஸ். முகம்மட் கியாத் தலைமையில் நடைபெற்ற இத்தொடரில், அரையிறுதிக்குள் எட்டிய மேலும் இரு அணிகளுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

