(அட்டாளைச்சேனை செய்தியாளர்- சஜான்)
திருக்கோவில் உதய சூரியன் விளையாட்டுக் கழகம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்த ‘ஜெயந்திற பிரியதீசன் ஞாபகார்த்த கிண்ணம் – 2026’ கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை அட்டாளைச்சேனை ‘சோபர்’ (Sober) விளையாட்டுக் கழகம் வரலாற்றுச் சாதனையுடன் கைப்பற்றியுள்ளது.
திருக்கோவில் பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிராந்தியத்தின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான ‘லீ ஸ்டார்’ (Lee Star) அணியை எதிர்கொண்டு சோபர் அணி களமிறங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய லீ ஸ்டார் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் முடிவில் வலுவான 66 ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சோபர் அணியானது துல்லியமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. இறுதிவரை பரபரப்பாகச் சென்ற இப்போட்டியில் சோபர் அணி வீரர்கள் தங்களின் அசத்தலான கூட்டு முயற்சியினால் சாம்பியன் பட்டத்தை நிலைநாட்டினர்.
சாம்பியன் கிண்ணத்தை வென்ற அட்டாளைச்சேனை சோபர் அணிக்கு சுழற்கேடயத்துடன் ரூ. 75,000 பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இத்தொடர் முழுவதும் சோபர் அணியின் வீரர்கள் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்திப் பல விருதுகளை வாரிக் குவித்தனர். இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக மிஃப்ராஹ் (சோபர் அணி),அரை இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக அக்ரம் சாஜித் (சோபர் அணி), தொடரின் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக ஜெசீல் (சோபர் அணி), தொடரின் அதிவேக அரைச்சதத்தை பெற்ற வீரராக ஜெசீல் (சோபர் அணி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.