Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

இன்று முதல் காசாவில் 10 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம்

Posted on July 27, 2025 by Admin | 291 Views

காசாவில் தொடரும் போர் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை ஒட்டி, நிவாரண உதவிகளை எளிதாக வழங்கும் நோக்கத்தில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளன. இதன்படி, இன்று (ஞாயிறு) முதல் காசாவின் மூன்று பகுதிகளில் தினசரி 10 மணிநேர தற்காலிக போர் நிறுத்தம் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை போர் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால அளவுக்குள், காசாவில் உள்ள நிவாரண அமைப்புகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக இயங்க வழிவகை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களாக நிலவும் தொடர்ந்து தாக்குதல், முற்றுகை மற்றும் தடைப்பட்ட பொருளாதார சூழ்நிலைகளால், காசா பகுதி கடுமையான பஞ்சநிலையை சந்தித்து வருகிறது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியங்கள் பொதுமக்களுக்கு சென்றடைய முடியாத நிலையிலிருந்து மீளும் வகையில், இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், மனிதாபிமான நோக்கங்களுக்காகவே இந்த தற்காலிக போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாகவும், குறிப்பிட்ட நேரத்திலும் பகுதிகளிலும் மட்டுமே இது நடைமுறையில் இருக்கும் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு வெளியேயான இடங்களில், ராணுவ நடவடிக்கைகள் தொடர வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“மனிதாபிமானக் கடமைகளையும், தேசிய பாதுகாப்பையும் ஒரே அளவிற்கு முன்னிட்டு நாங்கள் செயற்படுகிறோம்,” என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.