(அபூ உமர்)
அம்பாறை மாவட்டத்தில் இன்று (31.07.2025) நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்தி மற்றும் விவசாய பிரச்சினைகள் குறித்து முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் களமாக அமைந்தது.
இக்கூட்டம், அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில், கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், அம்பாறை மாவட்ட செயலகத்தின் A.I. விக்கிரம கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.
சமீபத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் அவர்களின் நெறிப்படுத்தலில், கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். வாசித், மஞ்சுல ரத்நாயக்க ஆகியோரும் பங்குபற்றுதலுடன் கரும்பு உற்பத்தியாளர் சங்கப் பிரதிநிதிகள் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அன்று அமைச்சர் உறுதியளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய நடவடிக்கைகள் கையெடுக்கப்பட்டன.
கரும்பு காணிகளின் உரிமம் யாருக்கு எவ்வளவு உள்ளதென மாவட்ட செயலாளர் தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. அதன் பிறகு உரிமங்களை சட்டபூர்வமாக வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கரும்பு விவசாயம் தொடர்பான புகார்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவற்றுக்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார்.
இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான M.S. உதுமாலெப்பை, M.S. வாசித், கே. கோடிஸ்வரன், அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல ரத்நாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதுடன் மேலும் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், பெருந்தோட்டக் கம்பனி – ஹிகுரான சீனி கல்லோய தொழிற்சாலை மற்றும் கரும்பு விவசாயிகளின் பிரதிநிதிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் , உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இக் கூட்டம், விவசாயிகள் மற்றும் தொழிற்துறையினருக்கிடையிலான நீண்டநாள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் முக்கிய பயணமாகக் கருதப்படுகிறது.