Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பியதால் பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

Posted on July 31, 2025 by Admin | 276 Views

இரத்தினபுரி பகுதியில் பொலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்த சந்தேகநபர் தப்பிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்துக்கு பொறுப்பாகக் கருதப்படும் இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் வெளியிட்டுள்ள தகவலின்படி, பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் ஒருவர் சார்ஜென்ட் மற்றும் மற்றையவர் காவலர் ஆவர்.

பல குற்றச்செயல்களில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட அந்த சந்தேகநபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

அந்த சந்தேகநபர் நேற்று (30) காலை சிறைச்சாலையிலிருந்து கழிப்பறை செல்ல அனுமதி கேட்டபோது கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் அவர் தப்பியோடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தப்பிச் சென்ற நபர், இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவராக இருக்கிறார். மேலும், சமீபத்தில் பாணந்துறை பகுதியில் நடைபெற்ற பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் அவருக்கு தொடர்புள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, சம்பவம் நேரம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பில் இருந்த அதிகாரியும், சந்தேகநபர் விடயத்திற்கு பொறுப்பாக இருந்த அதிகாரியும் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தப்பிச் சென்ற சந்தேகநபரை மீண்டும் கைது செய்ய, விசேட பொலிஸ் குழுவொன்று பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படும் எனவும் காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.