Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தத் தயங்குகிறது

Posted on November 11, 2025 by Admin | 228 Views

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்காக எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்புக் கோர வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று (திங்கட்கிழமை) பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றியபோது “அரசாங்கத்திடம் தெளிவான பெரும்பான்மை உள்ளது. எனவே, சட்டதிருத்தம் ஒன்றை கொண்டு வந்தால் மாகாணசபைத் தேர்தலை எளிதாக நடத்த முடியும். ஆனால் இந்த அரசாங்கம் அந்த தேர்தலை நடத்தும் எண்ணமே இல்லை” என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “2025 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட திட்டங்களில் வெறும் 20 சதவீதமானவை மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன, மீதமுள்ள 80 சதவீதம் செயல்படுத்தப்படாமல் போயுள்ளது. இதனால் மக்களுக்கு புதிய வரவு–செலவுத் திட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது” என்றார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த வாக்குறுதி மீண்டும் இந்த வரவு–செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், கடந்த ஆண்டுகளிலும் இதே வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும் அவை நடைமுறைக்கு வராதது வருந்தத்தக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்த முறை வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் அவசியம் நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்திய அவர், “மாகாணசபைத் தேர்தலைப் பற்றி ஜனாதிபதி தமது உரையில் குறிப்பிட்டிருந்தாலும், அதனை நடத்துவதில் அரசாங்கத்துக்கு விருப்பமில்லை என்பது தெளிவாக தெரிகிறது,” என்றார்.