(அட்டாளைச்சேனை செய்தியாளர்- ஆரிப்)
இறக்காம பிரதேச செயலகப் பிரிவில் பொதுத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரச காணி முறையான பராமரிப்பின்மையால் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் டெங்கு நோய் பரவலுக்கான அபாயத்தையும் உருவாக்கி வருவதாகப் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலைமை குறித்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவர் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து காணி அமைந்துள்ள இடத்தைப் பார்வையிட்டார்.
அந்த ஆய்வுப் பயணத்தில் இறக்காம பிரதேச சபை தவிசாளர் என்.எம். முஸ்மி, இறக்காம பிரதேச செயலாளர் றஸாம், பிரதேச சபை செயலாளர் எம்.ஐ. பாயிஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் றஜா மற்றும் நாஸர், அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளரின் பிரதிநிதி மற்றும் இறக்காம பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரியின் பிரதிநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சித்தேக அபேவிக்ரம , அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் நத்மினி மற்றும் அம்பாறை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் திரு பண்டார ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர் தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த அரச காணியை அவசரமாக சுத்தப்படுத்தி அதன் எல்லைகளைத் தெளிவாக நிர்ணயிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து பொதுத் தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த அரச காணியை விரைவாக சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கவும், அதன் பாதுகாப்பிற்காக சுற்று வேலி அமைக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளனர்.


