இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் தாக்குதலுக்குள்ளான ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena சம்பவத்தில் 104 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கடந்த மார்ச் 4 ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் கப்பல் தாக்குதலுக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துக்குப் பின்னர் கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 10 பேர் தற்போது வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்களுக்கு காலி தேசிய வைத்தியசாலையில் அண்மையில் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.