நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட அளவில் பலத்த மழை பதிவாகும் வாய்ப்பும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை நேரங்களில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படும் அபாயம் இருப்பதால், அதனால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைக்கும் வகையில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.