அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் 48 மணித்தியாலங்களுக்குள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகளை அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையை ஈரான் இராணுவம் கடுமையாக நிராகரித்துள்ளது.
ஈரானின் மத்திய இராணுவத் தளபதி ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாடி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை “உதவியற்ற, பதற்றமான, சமநிலையற்ற மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கை” என கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், அமைதி ஒப்பந்தம் எட்டப்படவோ அல்லது Strait of Hormuz மீண்டும் திறக்கப்படவோ இன்னும் 48 மணித்தியாலங்கள் மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். காலக்கெடுவிற்குள் இணக்கம் எட்டப்படாவிட்டால் “பெரும் அழிவுகள் ஏற்படும்” எனவும் எச்சரித்திருந்தார்.
இந்த அறிக்கைக்கு பதிலளித்த ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாடி “இந்த மிரட்டலின் உண்மையான அர்த்தம், நரகத்தின் கதவுகள் உங்களுக்காகவே திறக்கும் என்பதுதான்” என கடுமையான பதிலடி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த நேரடி வார்த்தைப்போர், பிராந்தியத்தில் போர் வெடிக்கும் அபாயத்தை மேலும் உயர்த்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன.