இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஈரான்–அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்தத் தெளிவான முடிவையும் எட்டாமல் நிறைவடைந்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நன்நோக்கத்துடன் கலந்து கொண்டதாக அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
12 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த இந்த உயர்மட்ட கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு முதன்முறையாக கருத்து வெளியிட்ட அவர், அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளுக்கு ஈரான் இணங்காததால் இரு தரப்பினருக்கும் இடையில் எந்தவித ஒப்பந்தமும் எட்டப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
ஈரானின் அணு ஆயுத திறனை கட்டுப்படுத்துவது தான் அமெரிக்காவின் பிரதான நோக்கமாகும் என வலியுறுத்திய அவர் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் அமெரிக்கத் தூதுக்குழுவினர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இந்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தானின் பங்களிப்பை பாராட்டிய துணை ஜனாதிபதி, அதற்கான நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.