(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவன் சியாம் முஹம்மட் யெஹ்யா சுலைமானி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து திறமையான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் தன்னுடைய கணிதத் திறமையையும் பகுத்தறிவு சிந்தனையையும் வெளிப்படுத்திய அவர் வெற்றி வாகை சூடி பாடசாலைக்கும், அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கும், அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த சாதனை குறித்து பாடசாலை நிர்வாகம் தெரிவித்ததாவது, “எங்கள் மாணவரின் இந்த வெற்றி, பாடசாலையின் கல்வித் தரத்தையும் மாணவர்களின் முயற்சியையும் பிரதிபலிக்கிறது” எனக் குறிப்பிட்டது. மேலும் மாணவரின் அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இந்த வெற்றிக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் பின்னணியில் மாணவனை வழிநடத்திய கணிதப் பாட ஆசிரியர்கள், பாட இணைப்பாளர், மற்றும் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கு பாடசாலை சமூகம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.
எதிர்காலத்திலும் இவ்வாறான சாதனைகள் மூலம் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை தேசிய மட்டத்தில் மேலும் உயரங்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.