Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

பிரபல புகைப்படக் கலைஞர்களின் இலவச செயலமர்வுகள் அக்கரைப்பற்றில்

Posted on May 2, 2026 by Admin | 137 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அக்கரைப்பற்று நகரில் நடைபெற்று வரும் “UNBOUND” “வனவிலங்கு மற்றும் இயற்கை புகைப்படக் கண்காட்சி” காட்சிப்படுத்தலுடன் மட்டுப்படுத்தப்படாமல் கலை ஆர்வலர்கள் மற்றும் இளம் புகைப்படக்காரர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளையும் வழங்கும் வகையில் சிறப்பம்சம் பெற்றுள்ளது.

மே 1 முதல் 3ம் திகதி வரை அக்கரைப்பற்று ஹல்லாஜ் தகவல் வள மையம் அரங்கில் நடைபெறும் இக்கண்காட்சியின் ஒரு பகுதியாக இரண்டு முக்கிய புகைப்பட செயலமர்வுகள் (Workshops) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இச்செயலமர்வுகள் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு நடைமுறை அறிவும் தொழில்நுட்ப புரிதலும் வழங்கும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ளன.

இன்றைய (02.05.2026) நிகழ்ச்சியாக சம்மாந்துறையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் முஹம்மத் பிரோஸ் அவர்கள் மாலை 4.30 மணிக்கு “Landscape Photography” குறித்த செயலமர்வை நடத்தவுள்ளார். இயற்கைக் காட்சிகளை கலைநயத்துடன் பதிவு செய்வது எப்படி, ஒளி மற்றும் கோணத் தேர்வின் முக்கியத்துவம், மற்றும் வெளிப்புறப் புகைப்படக் கலை நுணுக்கங்கள் போன்றவை இதில் விளக்கப்படவுள்ளன.

அதேபோன்று நாளை (03.05.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு காத்தான்குடியைச் சேர்ந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் உவைஸ் முஹைதீன் அவர்கள் “Photography அடிப்படைகள் மற்றும் கமெரா தொழில்நுட்பங்கள்” தொடர்பான செயலமர்வை நடத்தவுள்ளார். தொடக்கநிலை புகைப்பட ஆர்வலர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் இச்செயலமர்வில் கமெரா அமைப்புகள், லென்ஸ் பயன்பாடு மற்றும் தரமான படங்களைப் பெறும் முறைகள் குறித்து விரிவாக விளக்கப்படவுள்ளது.

இவ்விரு செயலமர்வுகளுக்கும் நுழைவு கட்டணம் எதுவும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அக்கரைப்பற்று மற்றும் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு புகைப்படக் கலை துறையில் தங்களை மேம்படுத்திக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

எனவே புகைப்படக் கலை மீது ஆர்வமுள்ள அனைவரும் இந்த செயலமர்வுகளில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.