Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இலங்கையில் வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

Posted on May 4, 2026 by Admin | 328 Views

இலங்கையில் எதிர்வரும் காலக்கட்டத்தில் வாகன விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்துள்ளமை விலையேற்றத்திற்கு பிரதான காரணமாகும். மே மாதம் முதல் சமூக பாதுகாப்பு வரி 2.5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருப்பதும் வாகனங்களின் செலவில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் வாகன இறக்குமதி துறையின் மூலம் அரசாங்கம் குறிப்பிடத்தக்க வருமானத்தை எதிர்பார்த்து வருவதாக கூறினார். தனது மதிப்பீட்டின் படி இவ்வருடம் சுமார் 700 பில்லியன் ரூபாய் வருவாய் அரசாங்கம் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளது.

பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் இறக்குமதி அரசாங்கத்திற்கு முக்கிய வருவாய் ஆதாரமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஒரு அமெரிக்க டொலருக்கு சுமார் 1.5 டொலர் வருமானத்தை அரசாங்கம் ஈட்டுகின்றதுடன் இறக்குமதியாளர்கள் ஒவ்வொரு டொலருக்கும் 2 முதல் 2.5 டொலர் வரை வரி செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

சில மின்சார வாகனங்களின் இறக்குமதியில் காணப்படும் வரி தொடர்பான சிக்கல்கள் காரணமாக அதிலிருந்து கிடைக்கும் வருமானம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பிரச்சினைகள் தொடர்பில் விரிவான ஆய்வு மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாணய மாற்று விகித உயர்வு மற்றும் புதிய வரி திருத்தங்கள் காரணமாக எதிர்காலத்தில் வாகன விலைகள் உயர்வு காணலாம் என்றும் அவர் எச்சரித்தார்.