(அட்டாளைச்சேனை செய்தியாளர்- வாஜித்)
போதைப்பொருள் மற்றும் மதுசாரப் பழக்கங்களிலிருந்து சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் பாதுகாப்பு அமைச்சின் தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளை மையப்படுத்தி முன்னெடுத்து வருகின்றது.
மாணவர்களின் பெற்றோர்களுக்கான “போதைப்பொருள் முட்தடுப்பு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு” தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் எம்.ஐ. அஜ்மீர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் போதைப்பொருள் முட்தடுப்பு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு திட்ட உத்தியோகத்தர் ஐ.எல். சனீர் மற்றும் சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எல். நஜிமுத்தீன் ஆகியோர் கலந்துகொண்டு போதைப்பொருள் பயன்பாட்டை ஆரம்பத்திலேயே தடுக்கும் வழிமுறைகள், பெற்றோர்களின் பொறுப்பு, இளைஞர்களை விழிப்புணர்வுடன் வழிநடத்துவதின் அவசியம் , மாணவர்களின் ஒழுக்க வளர்ச்சி, மனநலம், சமூக பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற விடயங்கள் குறித்து உரையாற்றினர்.
மாணவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்கும் முக்கியத்துவம், நண்பர்கள் வட்டாரத்தின் தாக்கம், சமூக ஊடகங்களின் எதிர்மறை பயன்பாடு உள்ளிட்ட சமகால சவால்கள் குறித்தும் பெற்றோர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
இந்நிகழ்வில் வழிகாட்டல் ஆலோசனைப் பொறுப்பாசிரியர் எம்.ஏ.எம். பெளஸ் உட்பட பல பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
