Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

மினாவில் இலங்கை ஹாஜிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை – உண்மைகளை மூடிமறைக்கிறாரா பிரதி அமைச்சர்?

Posted on June 10, 2026 by Admin | 194 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கு மினாவில் அடிப்படை வசதிகள் வழங்கப்படாமை தொடர்பாஎ விஷேட ஆணைக்குழு ஒன்றை நியமித்து உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கலாசார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை.

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் பேராசிரியர் திரு. ஹினிதுமா சுனில் செனவி அவர்களின் தலைமையில் 09.06.2026 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.

கண்டி மாவட்ட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் சரீப் கருத்துத் தெரிவிக்கையில் இந்த வருடம் ஹஜ் கடமைக்காக சென்ற ஹஜ்ஜாஜிகளுக்கு மினாவில் அடிப்படை வசதிகள் வழங்கப்படாதது விடயமாக என்னிடம் பலர் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இது தொடர்பாக அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில், இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக 3500 பேர் சென்றுள்ளனர். ஆனால் மினாவில் இலங்கையைச் சேர்ந்த ஹஜ்ஜாஜிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் மினாவில் மலசலகூட வசதிகள் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இவ்வாறான பிரச்சினைகள் எதிர்காலத்தில் நடந்து விடாமல் இந்த விடயம் தொடர்பாக விஷேட ஆணைக்குழு ஒன்றை கௌரவ கலாசார அமைச்சர் நியமித்து உண்மைத் தன்மையை வெளிக்கொணர வேண்டும். இலங்கை ஹஜ்ஜாஜிகளில் வயது முதிர்ந்தவர்கள், பெண்கள் மற்றும் நோயாளிகள் எல்லாம் தங்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஹஜ்ஜாஜிகள் ஒவ்வொருவருக்கு தலா 23 இலட்சத்தில் இருந்து 25 இலட்சம் வரை பணம் செலுத்தியுள்ளனர். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் அர்ப்பணிப்போடு பணி செய்யும் அமைச்சராகும். இலங்கையைச் சேர்ந்தவர்கள் இந்த தவறை செய்யவில்லை என தெரிவிக்கின்றனர். எனவே, இது தொடர்பான விடயங்களை வெளிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு கலாசார அமைச்சுக்கு உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

மினாவில் நடைபெற்ற விடயமாக சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலாபர் கருத்துத் தெரிவிக்கையில், மினாவில் இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கு அடிப்படை வசதிகளில் பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை என்றும் ஒவ்வொரு வருடமும் இவ்வாறு சில பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் மினாவுக்கு வெளியில் மலசலகூட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தூரம் என்பதால் இலங்கை ஹஜ்ஜாஜிகள் மலசலகூடங்களை பாவிக்கவில்லை என்றும், எனவே இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கு மினாவில் அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தமை பொய்யான விடயம் என பிரதி அமைச்சர் முனீர் முலாபர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எமது நாட்டில் வாழும் 22 இலட்சம் முஸ்லிம் மக்களின் முஸ்லிம் சமய பிரதி அமைச்சராகவும், மௌலவியாகவும் உள்ள நீங்கள் இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கு மினாவில் நடைபெற்ற உண்மையான விடயங்களை தெரிவிப்பதற்கு பதிலாக இலங்கை ஹஜ்ஜாஜிகள் பாதிக்கப்படவில்லை என கூறியது குறித்து இறைவனைப் பயந்து கொள்ளுங்கள் எனவும் பேசா விசாவில் யார், யார் மக்காவுக்குச் சென்றார்கள் என்ற விபரங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். கடந்த அரசு தவறு செய்ததாக கூறி விமர்சித்தீர்கள் ஆனால் தற்போது நீங்களும் அதே தவறை செய்துள்ளீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பௌத்த, கலாசார அமைச்சர் இந்த விடயமாக அறிக்கையினை பெறுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.