தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, நாட்டின் பாடசாலை மாணவர்களில் 12 சதவீதமானோர் அதிக எடையுடனும், 3 சதவீதமானோர் உடல் பருமன் நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடைந்து வரும் தற்போதைய பின்னணியில், எதிர்கால சந்ததியினரான பாடசாலை மாணவர்கள் இவ்வாறான சுகாதாரப் பாதிப்புகளுக்கு உள்ளாவது மிகுந்த துரதிர்ஷ்டவசமான ஒரு நிலைமை என சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் மோனிகா விஜேரத்ன கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் விளக்குகையில், தற்போதுள்ள உத்தியோகபூர்வ தரவுகளின்படி நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி வேகம் மிகவும் குறைந்த மட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1.9 ஆகக் காணப்பட்ட மக்கள் தொகை வளர்ச்சி வீதமானது, தற்போது 1.3 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.