இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட “சமூக ஊடகக் குறைந்தபட்ச வயது” (Social Media Minimum Age Bill) எனும் தனிநபர் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் உள்ள அபாயகரமான உள்ளடக்கங்கள் மற்றும் தேவையற்ற செயற்பாடுகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதே இந்தச் சட்டமூலத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதைத் தடுப்பதற்கும், அவர்கள் இணையத்தில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் இணைய சேவை வழங்குநர்களுக்கு (ISPs) உத்தரவிடப்படும்.
இந்தச் சட்டத்தின் கீழான செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், இது தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் ‘அங்கீகரிக்கப்பட்ட ஆணையாளர்’ ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் இலங்கையில் சேவைகளை வழங்கும் அனைத்து முன்னணி சமூக ஊடக நிறுவனங்களும் இந்த வயதுக் கட்டுப்பாடுகளைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.