(அக்கரைப்பற்று செய்தியாளர்- ஹன்பி)
அக்கரைப்பற்று மண்ணினதும் முஸ்லிம் சமூகத்தினதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கட்டான காலகட்டங்களில் அளப்பரிய அர்ப்பணிப்புடன் மக்கள் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எஸ்.எஸ்.பி. மஜீட் அவர்களின் நினைவாக விசேட குர்ஆன் ஓதல் மற்றும் துஆ பிரார்த்தனை நிகழ்வு நேற்று (06) அக்கரைப்பற்றில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாயிலில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து அக்கரைப்பற்று ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் இந்த ஆன்மீக நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்பிராந்தியத்தின் அரசியல், சமூக மற்றும் கல்வி மறுமலர்ச்சிக்கு எஸ்.எஸ்.பி. மஜீட் அவர்கள் ஆற்றிய காத்திரமான பங்களிப்புகள் இதன்போது நன்றியுணர்வுடன் நினைவுகூரப்பட்டதுடன் அன்னாரின் மறுமை வாழ்வின் உயர்பதவிகளுக்காக விசேட பிராத்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், மாநகர சபை உறுப்பினர் ஏ.எல். தவம், மர்ஹும் எஸ்.எஸ்.பி. மஜீட் அவர்களின் புதல்வர் உள்ளிட்ட குடும்பத்தினர்கள், உலமாக்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு துஆ பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

