(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேசத்தில் கடந்த 30 வருடங்களாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் தடுக்கப்பட்டுள்ள 21 விவசாயிகளின் காணிப் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை இன்று(22) சபையில் விசேட கேள்வியெழுப்பவுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ள வாய்மூல விடைக்கான வினாக்களின் போது, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் கவனத்திற்கு இந்த முக்கிய விடயத்தை அவர் கொண்டுவரவுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவலடி வட்டை பிரதேசத்தில் கடந்த 1986, 1989, 1991 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டன. இதன்போது, காணி ஆணையாளர் நாயகத்தின் அங்கீகாரத்திற்கு அமைவாக அம்பாறை மாவட்டச் செயலகத்தினூடாக 21 விவசாயிகளுக்குக் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இவ்வாறு சட்டபூர்வமாக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும், அம்பாறை மாவட்டச் செயலாளரின் பணிப்புரைக்கமைவாக எனக் குறிப்பிட்டு குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாமென இறக்காமம் பிரதேச செயலாளரால் இந்த விவசாயிகளுக்குத் தொடர்ச்சியாக இடையூறுகள் விளைவிக்கப்பட்டு வந்துள்ளன. சுமார் 30 வருடங்களாகக் கமத்தொழில் மற்றும் மேட்டுநிலச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்ட குறித்த 21 விவசாயிகளும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை உதுமாலெப்பை எம்.பி சபையின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளார்.
பாதிக்கப்பட்ட இந்த விவசாயிகளுக்குச் சொந்தமான காணிகளை மீண்டும் அடையாளம் கண்டு கையளிப்பதற்காக அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. பிரதேசச் செயலாளர் மற்றும் நில அளவையாளர் திணைக்கள உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய இக்குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்றபோது காணிகள் கையளிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் வெளியாட்கள் சிலர் அவர்களுக்கு இடையூறு விளைவித்திருந்தனர்.
இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கமத்தொழில் மற்றும் காணி அமைச்சர் அறிவாரா எனச் சபையில் வினவவுள்ள உதுமாலெப்பை எம்.பி, எவ்வித தடையுமின்றி குறித்த காணிகளை மீளவும் உரிய விவசாயிகளிடம் கையளிப்பதற்கு அமைச்சு எடுக்கவுள்ள துரித நடவடிக்கைகள் யாவை என்பது குறித்தும் அமைச்சர் தரப்பிலிருந்து விளக்கம்கோரவுள்ளார்.