பொத்துவில் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) மாணவர்கள் அண்மையில் மேற்கொண்ட மூன்று நாள் விசேட கல்விச் சுற்றுலாவின் முக்கிய அம்சமாக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சிறப்பான வழிகாட்டலின் கீழ் மாணவர்களின் நடைமுறை அறிவை மேம்படுத்தும் நோக்கில் இந்தக் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு கட்டமாகவே மாணவர்கள் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவ்விஜயத்தின் போது மாணவர்களுக்கு பாராளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம், அதன் கட்டமைப்பு மற்றும் சட்டம் இயற்றும் செயற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளை மாணவர்கள் பார்வையாளர் மாடத்திலிருந்து நேரடியாகப் பார்வையிட்டனர். இது மாணவர்களுக்கு நாட்டின் ஜனநாயக முறைமைகள் குறித்த நேரடி அனுபவத்தை வழங்குவதாக அமைந்தது.
இவ்விஜயத்தின் சிறப்பம்சமாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் எம்.எஸ். அப்துல் வாஸித் ஆகியோரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் மாணவர்களுக்குக் கிடைத்தது. இதன்போது, மக்கள் பிரதிநிதிகளுடன் மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் சமகால விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியதுடன் அவர்களுடன் இணைந்து நினைவுப் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.
எதிர்காலத் தலைமுறையினரான மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளையும், சமூக, அரசியல் ரீதியான விழிப்புணர்வையும் மேம்படுத்துவதற்கு இவ்வாறான கல்விச் சுற்றுலாக்கள் பாரிய பங்களிப்பை வழங்குகிறது.





