Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

கொந்தளிக்கும் காலநிலையால் நாட்டின் பல பகுதிகளை வெளுத்து வாங்கப் போகும் மழை

Posted on November 25, 2025 by Admin | 324 Views

இலங்கையைச் சுற்றியுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் உருவாகியுள்ள அசாதாரண நிலையால் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழைநிலை இன்று (25) முதல் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மாகாணங்களுடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றரை மீறும் மிக கனமழை பெய்யலாம்.

நாட்டின் மற்ற பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றரை மீறும் கனமழை ஏற்படக்கூடும்.

வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மணிக்கு சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பும் உள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களை தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.