இலங்கையில் இடம்பெறும் காடுகள் அழிப்பு, மணல் அகழ்வு போன்ற சுற்றுச்சூழல் அழிவுகளுக்குப் பின்னால் அரசியல் சக்திகள் தொடர்புடையதாக உள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற தேசிய நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, “சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது கைவிட முடியாத பொறுப்பு. எதிர்கால சந்ததிகளுக்காக இந்த இயற்கையை பாதுகாப்பது ஒன்றும் விருப்பம் அல்ல, கடமை,” என வலியுறுத்தினார்.
இலங்கையில் சுற்றுச்சூழல் தொடர்பான மிக வலுவான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இருப்பதைத் தனது உரையில் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான சட்டங்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்தின் மீது உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் காணப்படும் பல மணல் அகழ்வு நிலங்கள் அரசியல்வாதிகளுக்கே சொந்தமானவை அல்லது அவர்களுடன் நெருக்கமானவர்களுக்குச் சொந்தமானவை எனவும், இது சுற்றுச்சூழல் அழிவுக்கு வழிவகுக்கும் முக்கியக் காரணமாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
“உயிரைக் கொல்லும் நடவடிக்கைகளில் பங்கேற்காமல், உயிரைக் காக்க முனைவர்களுக்கு தேவையான அரசியல் பாதுகாப்பை நான் வழங்குவேன்,” என உறுதியளித்த ஜனாதிபதி, அரசியல் ஆதிக்கத்தின் கீழ் நடைபெறும் சுற்றுச்சூழல் நாசத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.