வெளிநாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் தாமதமின்றி அதிகாரபூர்வமாக பரிமாறப்பட வேண்டிய பிராந்திய காரியாலயங்களில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன எனும் கோரிக்கையினை 2025 ஜூன் 4ம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா மற்றும் தூதரக நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் திருகோணமலை, யாழ்ப்பாணம், மாத்தறை, குருநாகல், கண்டி இயங்கும் பிராந்திய கன்சியூலர் காரியாலயங்களில் நிரந்தர அதிகாரிகள் நியமிக்கப்படவில்லையென்றும்
திருகோணமலையில் உள்ள கன்சியூலர் காரியாலயம் கிழக்கு மாகாணம் மட்டுமின்றி, வட மற்றும் வடமத்திய மாகாண மக்களுக்கும் சேவையளிக்க வேண்டிய காரியாலயமாகும். இருப்பினும், வெளிநாட்டில் மரணித்த இலங்கையர்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க மக்கள் திருகோணமலை காரியாலயத்தை அணுகினால், சில அதிகாரிகள் “கொழும்பில்தான் அதை செய்ய வேண்டும்” என அறிவுறுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.
திருகோணமலை பிராந்திய காரியாலயத்திற்கு முழுமையான அதிகாரம் வழங்கி, அதனை செயற்பாட்டில் கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மற்ற பிராந்திய காரியாலயங்களுக்கும் தேவையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் இதற்கு பதிலளிக்கையில்….
குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சின் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாகக் கூறினார்.