2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்கான தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, 6 ஆம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் குறிப்பாக அனைத்துப் பாடசாலை அதிபர்களும் தவறாது நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் சமீப காலமாக ஏற்பட்ட அனர்த்தங்களை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்களை அடுத்த தரங்களுக்கு உயர்த்துவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், 11 ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.