பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் ஜனவரி 5ஆம் திகதிக்குள் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இதனிடையே ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (22) முற்பகலில் கல்வி அமைச்சில் நடைபெற்றது. கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 12ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டின.
இச்சந்திப்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கருத்துக்களை பிரதமர் ஓரளவு கவனத்துடன் கேட்டதாகவும் அவற்றை பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்ததாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.