கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகளில் இடம்பெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் புதிய சட்டங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு, கடந்த ஜூன் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது இடம்பெற்றது.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
“நாட்டில் இயங்கும் பல கூட்டுறவு வங்கிகளில் நிதி மோசடிகள், பொறுப்பற்ற நிர்வாகம் உள்ளிட்ட புகார்கள் தொடர்ந்து கிடைத்துவருகின்றன. இவை பொதுமக்கள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டவையாய் இருந்தாலும், தற்போது ஒரு சிறு வட்டாரத்திற்கு மட்டுமே பயன்படுகின்றன. இதனால் நம்பிக்கையின்மை உருவாகி வருகின்றது. இதனை தடுக்கும் நோக்கில் சட்ட நெறிமுறைகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.”
மேலும், சந்தையில் உப்பின் விலை தன்னிச்சையாக உயர்த்தப்படுவது தொடர்பிலும், முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
“பொதுமக்களுக்கு தற்போது உப்பு எளிதில் கிடைத்தாலும், சில வர்த்தகர்கள் அதிக லாப நோக்கில் விலையை உயர்த்த முயற்சிக்கின்றனர். இது தொடருமானால், உப்புக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும்,” எனக் கூறினார்.
அலுவலக செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் விதமாக அமைச்சின் கீழ் செயல்படும் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விரிவான அறிக்கையையும் வழங்கினர்.
இக்கூட்டத்தில், பிரதியமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, அமைச்சின் செயலாளர் மற்றும் பல்வேறு அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.