எதிர்வரும் இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க பங்களாதேஷ் அணி இந்தியா செல்ல மறுத்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையே நிலவி வரும் அரசியல் ரீதியான பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பங்களாதேஷ் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து இந்தியாவில் நடைபெறவிருந்த பங்களாதேஷ் அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு அந்த அணி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரில் பங்களாதேஷ் அணி கொல்கத்தாவில் மூன்று போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாட இருந்த பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் திடீரென அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டமை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பங்களாதேஷில் வாழும் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.