பிரதேசங்களில் உள்ள வீதி விளக்குகளுக்காக ஏற்படும் செலவினத்தை அந்தப் பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்தின் மூலம் வசூலிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின் பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்தார்.
அவர் கூறுகையில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் வீதி விளக்குகளின் மின்சார ‘வாட்’ அளவை கணக்கிட்டு, அதற்குரிய செலவை அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடையே பகிர்ந்து அவர்களின் மின்சாரக் கட்டணத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றதாக தெரிவித்தார்.
இவ்வாறு மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கப்படும் கூடுதல் தொகை பயனாளரின் மொத்த மின்சாரக் கட்டணத்தின் 2.2 சதவீதத்தை மீறக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது வீதி விளக்குகளை பராமரிக்கும் மற்றும் முகாமைத்துவம் செய்யும் அதிகாரம் பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும், முன்வைக்கப்பட்டுள்ள புதிய யோசனையின் கீழ் இந்த அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து நீக்கி வீதி விளக்குகளின் நிர்வாகத்திற்காக தனியான நிறுவனம் ஒன்றை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சஞ்சீவ தம்மிக சுட்டிக்காட்டினார்.