இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக மேலும் வலுவடையும் சாத்தியம் அதிகம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்புகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட கூறுகையில் குறித்த தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இதன் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ, மேல், தென், ஊவா, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என அவர் எச்சரித்தார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புகளின்படி வட மாகாணத்தின் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 75 முதல் 100 மில்லிமீட்டர் வரையிலான மழை பெய்யலாம். அதேபோல் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 50 முதல் 75 மில்லிமீட்டர் வரையிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மாலையிலோ இரவிலோ இடியுடன் கூடிய மழை பெய்யலாம். தென் மாகாணத்தின் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
ஊவா மாகாணத்தின் மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழையுடன் சுமார் 100 மில்லிமீட்டர் வரையிலான மழைவீழ்ச்சி ஏற்படலாம் எனவும், மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களிலும் 75 முதல் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தற்போது 80 முதல் 90 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. இதன் காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள ஆற்றுப்படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் பணிப்பாளர் நாயகம் எச்சரித்தார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அவசர நிலைமைகளை எதிர்கொள்ள 80 இராணுவ குழுக்கள் மற்றும் கடற்படை படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படையினர் வீரவில, பாலாவி, இரத்மலானை, ஹிங்குரக்கொட மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் ஹெலிகொப்டர்களை நிலைநிறுத்தியுள்ளதாகவும் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார். இதனுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களமும் அவசர நடவடிக்கைகளுக்குத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.