புறாக்கள் வளர்ப்பு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேலியகொடை காவல்துறை தெரிவித்துள்ளது.
பேலியகொடை காவல்துறைக்குட்பட்ட மீகஹவத்த பகுதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறின் போது இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக காவல்துறை கூறியுள்ளது.
படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் அனுமதிக்கும் போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர் வத்தளை ஒலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.