(சாய்ந்தமருது செய்தியாளர் -கமால்)
சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (29.01.2026) சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற போது அபிவிருத்தி விடயங்களை விட ஊடக சுதந்திரம் தொடர்பான கேள்விகளை அதிகம் எழுப்பியுள்ளது.
சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்காக பிரதேச செயலாளரிடம் முறையாக அனுமதி கோரி வருகை தந்திருந்த ஊடகவியலாளருக்கு அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா அனுமதி மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அதே கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்காக வந்திருந்த மற்றுமொரு ஊடகவியலாளருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை பலரிடமும் அதிருப்தியையும் சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது.
ஒரே கூட்டம், ஒரே இடம், ஆனால் இரு விதமான அணுகுமுறை இது எதை உணர்த்துகிறது?
மேலும் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் குறிப்பாக ஆதம்பாவா எம்பி தலைமை வகிக்கும் சில பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஊடகவியலாளர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
பொதுமக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் அபிவிருத்தி கூட்டங்கள் பொதுமக்களுக்கு பொறுப்புடையவையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடக்க வேண்டிய நிலையில் ஊடகங்களின் பங்கேற்பே கேள்விக்குறியாக்கப்படுவது ஜனநாயகத்திற்கு உகந்ததா என்ற கேள்வி எழுகிறது.