Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

குவைத் நாட்டு நன்கொடையுடன் பள்ளிவாசல்களுக்கு பேரீத்தம் பழங்கள் விநியோகிக்கும் நிகழ்வு பாலமுனையில் ஆரம்பம்

Posted on February 24, 2026 by Admin | 317 Views

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு குவைத் நாட்டு மக்களின் தாராள நிதிப் பங்களிப்புடன் பள்ளிவாசல்களுக்கு பேரீத்தம் பழங்கள் வழங்கும் மனிதநேய செயற்றிட்டம் அம்பாரை மாவட்ட உலமா சபைத் தலைவரும் சிலோன் செரிட்டி (Ceylon Charity) அமைப்பின் தலைவர் ஐ.எல்.எம். ஹாஸிம் ஸூரி அவர்களின் தலைமையில் 2026.02.22ம் திகதி பாலமுனையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கிவைத்ததுடன் சமூக ஒற்றுமையினையும் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்க்கும் இத்தகைய பணிகள் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதாகவும், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றும் பிரதேச செயலாளர் தனது உரையில் குறிப்பிட்டார்.

குவைத் நாட்டு மக்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இத் திட்டத்தின் ஊடாக பிரதேச பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் இப்தார் தேவைகளுக்காக பேரீத்தம் பழங்கள் வழங்கப்பட்டன. ரமழான் காலத்தில் நோன்பாளர்களுக்கு இவ்வகை ஆதரவு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. மாவட்டத்தின் சிவில் மற்றும் சமயத் தலைவர்களின் ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புகளின் (NGO) இணைப்பாளர் ஐ.எல்.எம். இர்பான் , சிலோன் செரிட்டி அமைப்பின் பொதுச் செயலாளரும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான யூ.எல். அலி அஸ்ரப் ,பள்ளிவாசல்களின் நிருவாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.