Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து ஈரானுக்கு பதிலடி வழங்க எச்சரிக்கை

Posted on March 2, 2026 by Admin | 255 Views

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்ற நிலைக்கு இடையில் ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிராக தகுந்த பதிலடி நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

வளைகுடா ஒத்துழைப்பு சபை Gulf Cooperation Council (GCC) சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் இணைந்து இந்த முடிவை அறிவித்துள்ளன.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பிராந்தியத்தில் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் பல கட்டங்களாக தூதரக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவற்றை பொருட்படுத்தாமல் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

“எங்களது நாடுகளின் பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் தொடர்பான விவகாரங்களில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை. ஈரானின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூட்டறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவும் போர்ப்பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில் வளைகுடா நாடுகளின் இந்த அறிவிப்பு பிராந்திய அரசியல் நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளதாக சர்வதேச அவதானிகள் மதிப்பிடுகின்றனர்.