இலங்கையில் எரிபொருள் ஒதுக்கீட்டை சிக்கனப்படுத்தும் நோக்கில் QR குறியீடு முறையின் கீழ் புதிய விநியோக அட்டவணை இன்று (19) முதல் அமுலுக்கு வருகிறது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையின்படி வாகனங்களின் இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் வழங்கப்படும். இறுதி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் அந்த வாகனங்களுக்கு இரட்டை எண்கள் கொண்ட திகதிகளில் எரிபொருள் வழங்கப்படும். அதேவேளை இறுதி இலக்கம் ஒற்றை எண்களாக இருந்தால் ஒற்றை திகதிகளில் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்.
இதன்படி 0, 2, 4, 6 மற்றும் 8 இறுதி இலக்கங்களை கொண்ட இலக்கத் தகடுகள் கொண்ட வாகனங்களுக்கு இரட்டை திகதிகளில் சேவை வழங்கப்படும். 1, 3, 5, 7 மற்றும் 9 ஆகிய இலக்கத் தகடுகள் கொண்ட வாகனங்களுக்கு ஒற்றை திகதிகளில் எரிபொருள் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலையால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உள்நாட்டில் எரிபொருளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் கிடைக்கும் எரிபொருள் இருப்புகளை சிக்கனமாக நிர்வகிக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையைக் கருத்தில் கொண்டு எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்த QR குறியீடு முறையை மீண்டும் அமுல்படுத்த அரசாங்கம் கடந்த 16ஆம் திகதி முதல் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.